

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் ராணிபேட்டை பனப்பாக்கத்தில் ரூ.271 கோடி முதலீட்டில் தோல் மற்றும் தோல் சார்ந்த துணைப்பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக, மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சக இணைச் செயலர் (நிதி) கேசர்வானி தெரிவித்தார்.
மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் மற்றும் தோல் ஏற்றுமதி கவுன்சில் சார்பில், தோல் மற்றும் தோல் அல்லாத துறை சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் குறித்த நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக இணைச் செயலர் (நிதி) கேசர்வானி கூறியதாவது: நாட்டில் தோல் மற்றும் காலணித் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் ராணிப்பேட்டை, பிஹார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் ரூ.891 கோடி முதலீட்டில் தோல் மற்றும் தோல் சார்ந்த துணைப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை (கிளஸ்டர்ஸ்) அமைக்கப்பட உள்ளன. இவற்றில், தமிழகத்தில் ராணிபேட்டையில் பனப்பாக்கத்தில் ரூ.271 கோடி முதலீட்டில் தோல் மற்றும் அது சார்ந்த துணைப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
தோல் மற்றும் தோல் அல்லாத பொருட்கள் உற்பத்தி, தோல் உற்பத்தியில் உள்நாடு தேவை மற்றும் வெளிநாடு ஏற்றுமதி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.