

சென்னை: உலகப் புகழ் பெற்ற வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளான சவுமியா சுவாமிநாதன் லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: உலக நல நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக செயல்பட்டு, கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் உலக மக்களுக்கு அறிவியல் ரீதியாக வழிகாட்டிய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக சிறப்பாகப் பணியாற்றிய, வேளாண்மை விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளான டாக்டர் சவுமியா சுவாமி நாதன் - லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உலகின் பழமையான அறிவியல் அகாடமிகளில் ஒன்றான பிரிட்டன் ராயல் சொசைட்டி அமைப்பின் உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவியல், சுகாதாரம் மற்றும் உலகளாவிய நெருக்கடி மேலாண்மை ஆகியவற்றைத் திறம்படக் கையாண்டு பொது சுகாதாரத் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய சவுமியா சுவாமிநாதனின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் மேன்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.