

பிரக்ஞானந்தா
சென்னை: நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் விஜய்: நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் - 2026 தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரே தொடரில் நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை 2 முறையும், 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: நார்வே செஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா பெற்ற வெற்றி, கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமளிக்கும். உலக அரங்கில் இந்தியாவின் புகழை கொடிகட்டி பறக்க செய்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுக்கள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நார்வே நாட்டில் நடைபெற்ற செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கும் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பயணம் தொடர்ந்து செஸ் விளையாட்டு உலகில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்.