

சென்னை: தேர்வு மைய ஒதுக்கீட்டில் நிகழ்ந்த குளறுபடி காரணமாக தமிழகத்தில் நேற்று நடக்க இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2 மெயின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: அரசுப் பணிக்கான தேர்வைக் கூட நடத்த முடியாத லட்சணத்தில்தான் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும், திராவிட மாடல் திமுக அரசும் உள்ளது. திமுக அரசின் நிலையை இந்த செயல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தேர்வர்களை அலைக்கழித்து, தவிக்கவைத்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தை கண்டிக்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: குரூப்-2 போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வுநாளன்று தள்ளிவைக்கப்படுவது தமிழக வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது சுமத்தி, அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல், இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க முறையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஆளும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: மிகச் சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக்கூட குளறுபடி இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில்தான் திமுக அரசுஉள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அரசுத் தேர்வுகளில் இதுபோன்ற குழப்பம் எதேச்சையாக நடந்ததா அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற திட்டமிட்ட சதியா என்பதை பொது மக்களிடம் விளக்க வேண்டியது தமிழக முதல்வரின் தார்மீகப் பொறுப்பு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: தேர்வை நடத்துவதில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் இந்த விவகாரத்துக்காக தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் தமிழிசை, அண்ணாமலை, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் டிஎன்பிஎஸ்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.