

சென்னை: மழைநீர் வடிகால் பணிக்காக சாலைகளை தோண்டும்போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், இதுதொடர்பாக தமிழக அரசு இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோட்டூர்புரத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோட்டூர்புரம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளுக்காக சாலைகள் அடிக்கடி தோண்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளின்போது வீடுகளின் மின்இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளும், கழிவுநீர் இணைப்புகளும் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமம் அடைய வேண்டியுள்ளது.
மழைநீர் வடிகால் பணிக்கு பிறகு தோண்டப்படும் சாலைகள் மீண்டும் முறையாக சீரமைக்கப்படாததால் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க நேரிடுகிறது.
எனவே, இனிவரும் காலங்களில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளை தோண்டும்போது சென்னை மாநகராட்சி, மின் வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், காவல்துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்படும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்.
அதேபோல், கோட்டூர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.1 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.