

கோப்புப் படம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெறும். தென் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்” என அக்கட்சியின் தலைவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: . புதிய தமிழகம் கட்சி தேர்தலுக்கு ஆயத்தமாக இருக்கிறது.ஆனாலும் தற்போது கூட்டணி காலமாக மாறிவிட்டது. அதற்கும் நாங்கள் ஆயத்தமாக உள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை வலுவாக, சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்.
2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும். ஊழலற்ற, மது சீரழிவுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய, வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய, நல்ல திட்டங்களை செயல்படுத்தக்கூடிய நல்ல அரசு அமைய வேண்டும். அந்த அரசில் நாங்களும் இருக்க வேண்டும். வலுவான கூட்டணி, வெற்றிக் கூட்டணி அமைய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறோம். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் என்பது வெறும் எந்திரத்தனமாக இருக்கக்கூடாது. அந்த மாற்றத்தில் பொருள், அழுத்தம் இருக்க வேண்டும். சமநிலை இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அதுதான் எங்கள் பிரதானக் கொள்கை.
புதிய தமிழகம் கட்சிக்கு பல தொகுதிகளில் கணிசமான வாக்கு உள்ளது. இதனை கவனத்தில் வைத்து கூட்டணிபேசி வருகிறோம். தென் தமிழகத்தில் தொழில் வளம் வளர வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். எனவே, தென் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.