

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றிருப்பது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய பாடம் என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு வாழ்த்துகள்.திமுக அரசு நல்லாட்சி தருவதற்கு பதிலாக, அலங்கோலமான ஆட்சியை நடத்தியுள்ளது.
தங்களுக்கு சாதகமான ஊடகங்களை வைத்துக் கொண்டு எல்லாம் நன்றாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி ஆட்சியை கடத்தினார்கள். ஆனால், விஞ்ஞான ரீதியாக ஒரு வரையறை உண்டு.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக சில தேசிய ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டன. ஆனால், மக்கள் மனதில் திமுகவுக்கு எதிரான மனநிலை இருந்துள்ளது. இப்போது, தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலையில் தவெக உள்ளது.
இது சாதாரண வெற்றி அல்ல. மேலும், இத்தோல்வி திமுக ஆட்சிக்கு கிடைத்த மரண அடி. திமுக, அதிமுகவுக்கு எதிரான முகமாக விஜய்யை மக்கள் பார்க்கிறார்கள். தவெகவின் இந்த வெற்றி திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கு மிகப்பெரிய பாடம்.
இதற்காக தமிழக மக்களைப் பாராட்டுகிறேன். தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அது தவெக மூலமாக நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.