

சென்னை: தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேசவ விநாயகத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தமிழக பாஜக தலைவர்கள் பிரிவு உபசரிப்பு விழா நடத்தி அவரை வழியனுப்பி வைத்தனர்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றிய கேசவ விநாயகன், கடந்த 2015-ம் ஆண்டு தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகத்தை விடுவிக்கவும் ஆர்எஸ்எஸ்-ல் புதிய பொறுப்பு வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தென்பாரத செய்தி தொடர்பாளர் ராம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது பல ஆண்டாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்த கேசவ விநாயகன், இனி தமிழகம் முழுவதும் சத்பாவ் (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில்
செயல்படுவார். அத்துடன் வடதமிழகத்தின் ஆர்எஸ்எஸ் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகன், கட்சியின் அதிகார மையமாகத் திகழ்ந்தவர்.
இந்நிலையில், 2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்தவும், புதிய உத்திகளை வகுக்கவும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேசவ விநாயகத்துக்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த பிரசோப குமார் அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பாஜக தலைமை அலுவலகத்தில் கேசவ விநாயகத்துக்கு நேற்று பிரிவு உபசரிப்பு விழா நடந்தது. இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.