

சென்னை: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று இரவு சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எனது நண்பர் மு.க.ஸ்டாலின் நடத்திய 5 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு நல்ல வளர்ச்சி திட்டத்தை ஏற்படுத்தி உள்ளார்.
அதனால் தமிழகம் முன்னேறிய மாநிலமாக ஆகிக் கொண்டு இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஸ்டாலின் அதிக மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பார்.
மாநிலங்களில் உள்ள ஆட்சியாளர்களை, மோடி அரசு தனது கைக்குள்வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது.
ஆனால், ஸ்டாலின் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், ஸ்டாலினை பாஜக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.