

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: சென்னையில் மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து எல்டாம்ஸ் சாலை முதல் தி.நகர் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சாலைவலம் நடத்தி வாக்கு சேகரித்தார்.
சென்னை போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலை முதல் தி.நகர் வரை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சாலை வலம் (ரோடு ஷோ) வந்தார். முதலாவதாக மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் த.வேலுவை ஆதரித்து எல்டாம்ஸ் சாலையில் ரோடு ஷோ நடத்தினார்.
அவர் வருகை தந்த வழியெங்கும், சாலையில் இருபுறம் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று அவருக்கு மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ரோடுஷோவில் தொகுதி வேட்பாளர்களுடன் வலம் வந்த முதல்வர் ஸ்டாலின், வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது தொண்டர்களும், பொதுமக்களும் வழங்கிய பரிசு பொருட்களையும் அவர் வாங்கிக் கொண்டார். மயிலாப்பூர் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மயிலாப்பூர் தொகுதியில் த.வேலு ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து எப்படியெல்லாம் பணியாற்றி இருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய சேவகனாக, ஒரு தொண்டனாக, உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து அவர் பணியாற்றிய பாங்கை பார்த்து நானே வியந்திருக்கிறேன், பாராட்டியிருக்கிறேன்.
ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மயிலை வேலு திகழ்ந்திருக்கிறார். அதனால் தான் அவரை மீண்டும் வேட்பாளராக தேர்வு செய்து நிறுத்தியிருக்கிறேன். எனவே, உதய சூரியனுக்கு நீங்கள் ஆதரவு தந்து, மயிலை த.வேலுவை பெரியளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் எழிலன் நாகநாதனையும், தி.நகர் தொகுதியில் போட்டியிடும் ராஜா அன்பழகனையும் ஆதரித்து ஆயிரம் விளக்கு தாமஸ் சாலை, தி.நகர் பர்கிட் சாலை வழியாக ரோடு ஷோவில் வலம் வந்தார்.
வழிநெடுகிழும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “சென்னையையும், என்னையையும் யாராலும் பிரிக்க முடியாது.
அடுத்த 2 நாட்கள் சென்னையில் தான் தெரு, தெருவாக சென்று வாக்கு சேகரிக்க போகிறேன். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் 200-க்கும் மேலே வெற்றிபெறுவோம் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் அதில் ஆச்சரியம் இல்லை. அது வந்தால் தான் நம்மை கண்டு பயப்படுவார்கள். இல்லையென்றால் தமிழகத்தை குட்டிச் சுவராக்கி விடுவார்கள்” என்று பேசினார்.