

பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வந்த கஸ்தூரி.
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சார்பில் பொங்கல் விழா மொரப்பூரில் நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பாஜக கலை, கலாசார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக நிர்வாகியாகவும், தனிப்பட்ட ரசிகையாகவும் விஜய் படங்களை விநியோகித்துக் கொண்டிருந்த விநியோகஸ்தராகவும் சொல்கிறேன், ‘ஜன நாயகன்’ படம் தணிக்கைக்கு உட்பட்டு சரியான சான்றிதழுடன் விரைவில் திரைக்கு வேண்டும்.
நீதிமன்றத்தை அணுகாமல் தணிக்கை குழுவை அணுகியிருந்தால் முன் கூட்டியே தீர்வு கண்டிருக்கலாம். தயாரிப்பு தரப்பில் அனுபவம் இல்லாமல் இவ்வாறு செய்துவிட்டனர் என்ற வருத்தம் உள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை.
முதல்வர் ஸ்டாலின் தேர்தலை குறிவைத்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார். செவிலியர்கள், ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். ஜாக்டோ - ஜியோ போராட்டம் அறிவித்த நிலையில் உடனடியாக ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளனர். இது பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். தூய்மைப் பணியாளர்களை நடு இரவில் கைது செய்கின்றனர்.
ஜனவரி பிறந்தவுடன் மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள், 3 ஆயிரம் பொங்கல் பரிசு என பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர். ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். பிரச்சினைகள் குறித்து 4 ஆண்டுகளாக சொல்லியும் நடவடிக்கை இல்லை.
இப்போது உங்க கனவ சொல்லுங்கன்னு சொல்கிறார். பல்லிக்கு பலன், கை ரேகை பலன் போல கனவுக்கு என்ன பலன் அப்படீன்னு சொல்லப் போகிறார்களா? தீய சக்தி திமுக-வுக்கு எதிராக அத்தனை கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது. திமுக கூட்டணியில் உள்ளவர்களும் வெளியேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்