“திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சி!” - கனிமொழி எம்.பி

கனிமொழி

கனிமொழி

Updated on
2 min read

புதுடெல்லி: “உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம். இதுபோன்ற தவறான தீர்ப்புக்குப் பிறகுதான் மணிப்பூரிலும் கலவரங்கள் வெடித்தன. திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன” என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரத்தில் சிக்கந்தர் தர்காவுக்கும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக மக்களிடையே மத குரோதத்தை உருவாக்கக் கூடிய விதமாக தேவையில்லாமல் சிலர் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.

மக்களுக்கு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் தமிழ்நாடு அரசு சரியாக செய்து கொண்டிருக்கிறது. கார்த்திகை தீபம் தொடர்ந்து ஏற்றப்படுகிறது. கோயில் நிர்வாகமும் அறநிலையத் துறையும் சேர்ந்து கார்த்திகை தீபத்தை மலைமீது இருக்கும் பிள்ளையார் கோயிலில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன் வழக்கமாக மலை அடிவாரத்தில் இருக்கும் கோயிலில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கோயில் மலைமீது கட்டப்பட்ட பிறகு அங்கு அந்த தீபம் ஏற்றப்படுகிறது.

ஆனால் திடீரென்று எந்த மதத்துக்கும் சம்பந்தமே இல்லாத ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக்கல் (சர்வே ஸ்டோன்) மீது தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது.

இந்து மதத்துக்கு எதிராக இந்து மக்களின் மனநிலையை புண்படுத்தும் வகையில் கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.

ஏற்கெனவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கிவிட்டது. இப்போது நீதிபதி சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு அரசை மீறி ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார். தமிழ்நாடு காவல் துறையைத் தாண்டி, மத்திய காவல் படையைத் தீபம் ஏற்றுவோருக்கு துணையாக அனுப்பி வைக்கிறார்.

இதை பயன்படுத்திக் கொண்டு பாஜக மத கலவரத்தை உருவாக்க நினைத்தது. பாஜகவை சேர்ந்தவர்கள் இதை இன்னொரு அயோத்தியாக மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அவர்களே இதை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பதிவு செய்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பியபோது, அமைச்சர் கிரண் ரிஜிஜு மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலுவைப் பார்த்து, “நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல” என்று மிரட்டக்கூடிய வகையில் எச்சரிக்கை விடுக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நேரமில்லா நேரம் என்பது உறுப்பினர்களின் நேரம். அவர்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைக்கக் கூடிய நேரம். ஆனால், அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அமைச்சர் எல்.முருகன் தேவையில்லாமல் மிக நீண்டதொரு உரையை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரும் பல பொய் பிரச்சாரங்களை முன்வைத்தார்.

தமிழ்நாடு அரசின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் காழ்ப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவர் பேசினார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றார்.

மேலும், “தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற பிரச்சினைகளைக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்திலும் அப்படியொரு பிரச்சினையைக் கொண்டுவந்து மதக்கலவரத்தை உண்டாக்குவதுதான் பாஜகவின் அரசியல் வியூகம். பிரச்சினையை உருவாக்கி, அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்கிவிட வேண்டும் என்பது தான் அவர்கள்து எண்ணம்.

அவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள், தமிழர்களாக தங்களை முதலில் உணர்ந்தவர்கள். யார் தங்களுக்காக பாடுபடுகிறார்கள், பெரும்பான்மை மக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு யார் உழைக்கிறார்கள், யார் மக்களை பிளவுபடுத்தி அவர்களை ஆபத்தில் தள்ள நினைக்கிறார்கள் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டவர்கள். இப்படியான பிரச்சனைகளை உருவாக்குவது எந்த காலத்திலும் பாஜகவுக்கு பயன்படாது.

நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பியபோது, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எங்களோடு நின்றார்கள்.

இந்தத் தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம், இதுபோன்ற தவறான தீர்ப்புக்குப் பிறகுதான் மணிப்பூரிலும் கலவரங்கள் வெடித்தன.

தமிழ்நாடு அரசு பல கோயில்களில் குடமுழுக்கு நடத்துகிறது, விழாக்களை நடத்துகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் அறநிலையத் துறை செய்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முன்பிருந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு குடமுழுக்கு நிகழ்ச்சிகள் தற்போது நடக்கின்றன.

மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும், பக்தர்களுக்கு இடையூறுகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் நாங்கள் இல்லை. பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி அரசியல் குளிர்காய்வதற்காக பாஜகவினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள், அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அமைச்சர் எல்.முருகன் பேசும்போது இந்துக்களை திருப்பரங்குன்றத்துக்குள் அனுமதிக்கவில்லை என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார். எந்தக் காலத்தில் இந்துக்கள் திருப்பரங்குன்றத்துக்கு போக முடியாத சூழ்நிலை இருந்தது? திருப்பரங்குன்றத்துக்கு போக முடியாது சூழ்நிலை இருந்தது? திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போகும் இந்துக்கள் தர்காவுக்கும் சென்று வழிபட்டு வரும் இணக்கமான சூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. இன்று யாரும் போக முடியாத சூழலை பாஜக தான் உருவாக்கியிருக்கிறது.

ஆகம விதிகள் என்று பேசக்கூடியவர்கள் அந்த ஆகம விதிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கக் கூடிய வகையில் தீபத் திருநாள் முடிந்த அடுத்த நாள் தீபத்தை ஏற்றுவது என்பது ஆகம் விதிகளின்மீது நம்பிக்கை வைத்திருக்கக் கூடிய இந்துக்களின் மனதை புண்படுத்தக்கூடியது. 

யாருடைய மனதையும் புண்படுத்த கூடிய வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளவில்லை. அப்படி எங்கள் மீது பழி சுமத்துபவர்கள்தான் உண்மையில் மக்களைப் புண்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை தன் அரசியலுக்காக ஒவ்வொரு நாளும் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. மத பிரச்சனைகள் இல்லாத மாநிலமாக இருக்கிறது. பாஜக, ஆட்சி செய்யும் ஓர் இடத்திலாவது மத நல்லிணக்கமும் அமைதியும் இருக்கிறதா? யாரால் அங்கு மதப் பிரச்சினைகள் உருவாகிறது?  அப்படிப்பட்ட பிரச்சினைகள் இல்லாத, மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கித் தந்திருக்கிறது. அதைக் குலைக்கத்தான பாஜக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்றார் கனிமொழி எம்.பி.

<div class="paragraphs"><p>கனிமொழி</p></div>
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in