

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறையின் செயலர் அஜித் குமார் மொஹந்தி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். உடன் அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை உள்ளிட்டோர் உள்ளனர்.
சென்னை: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் அணுசக்தித் துறையால் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், அதிவேக சோதனை ஈனுலையில் இருந்து வெளிவரும் வெப்பத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. தாமிரம், குளோரின் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி (தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சி) இந்த புதிய முறையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையத்தை அணுசக்தி துறை செயலர் அஜித்குமார் மொஹந்தி திறந்து வைத்தார். இதற்கு அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி.பிள்ளை முன்னிலை வகித்தார்.
இந்தப் புதிய தொழில்நுட்பத்தை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளது. அணுசக்தியைப் பயன்படுத்தி எப்படி ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது என்பதை நிரூபித்துக் காட்டும் ஒரு முன்னோடி மையமாக இது அமைக்கப்பட்டுள்ளது. அணு உலை வெப்பத்தின் மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது ஒரு மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.
இதன்மூலம், சுற்றுப்புறச் சூழலை பாதிக்காத தூய்மையான ஹைட்ரஜனை எதிர்காலத்தில் பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும். இதுதவிர பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எதிர்காலத்தின் முக்கிய எரிபொருளாக ஹைட்ரஜன் திகழ வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு வழிகளில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட்டாலும், கல்பாக்கத்தில் பயன்படுத்தப்படும் இந்த புதிய முறையில் குறைந்த வெப்பத்திலேயே அதிக அளவில் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பதால் இது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
அணுசக்தியைப் பயன்படுத்துவதால், நிலக்கரி போன்ற எரிபொருட்களின் தேவை குறைகிறது. மேலும், சுற்றுப்புறச் சூழலை மாசடையச் செய்யும் புகைகள் வெளியேறுவதும் தடுக்கப்படுகிறது. அணுசக்தி மூலம் வணிகரீதியாக ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான எதிர்கால ஆராய்ச்சிகளுக்கும் இந்த மையம் பெரிதும் உதவும்.
தொடக்க நிகழ்ச்சியில் அஜித்குமார் மொஹந்தி பேசும்போது, “ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை அணுசக்தி மூலம் உருவாக்குவது, எதிர்கால எரிசக்தித் தேவைக்கு மிக முக்கியமானதாகும். எவ்வித சுற்றுச்சூழல் மாசும் இல்லாமல் மின்சாரத்தையும், அதிக வெப்பத்தையும் கொடுக்கும் ஆற்றல் அணுசக்திக்கு மட்டுமே உள்ளது. இது இந்தியாவின் எரிசக்தித் தேவைக்கும், சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் இலக்குகளுக்கும் பெருமளவு உதவும். இந்த மேம்பட்ட அறிவியல் கருத்தை சாத்தியமாக்கிக் காட்டிய, பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்த சாதனை, அணுசக்தி தொழில்நுட்பங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஒரு சான்றாகும்’’ என்றார்.