

சென்னை: உயர் நீதிமன்றம் தலையிட்டு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வரை மெரினாவை ஆக்கிரமித்திருந்த கடைகள் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மெரினாவில் உணவுப் பொருட்கள், பொம்மை மற்றும் பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டுமென்றும், இதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான என்.பால்வசந்த குமாரை நியமித்தும் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி 300 பேருக்கு மெரினாவில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினாவில் ஏற்கெனவே கடைகளை வைத்திருந்த 600-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், “கடற்கரைக்கு அருகில் உள்ள வியாபார மண்டலங்களில் மட்டுமே கடைகள் ஒதுக்கப்பட வேண்டும். மெரினாவை வியாபாரத் தலமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கேரளாவின் கோவளம், ஒடிசாவின் பூரி, மும்பை மெரைன் டிரைவ் போன்ற கடற்கரைகளைப்போல மெரினாவையும் அழகுபடுத்தி சுத்தமாக பராமரித்தால் மட்டுமே இந்திய சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தருவர்.
நீதிமன்றம் தலையிடும் முன்பாக, மெரினா கடற்கரை முழுமையாக கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுத்தமில்லாமல் இருந்தது. அந்த கடைகள் மாஃபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. கடை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த அந்த கும்பல் நீதிமன்ற தலையீடு காரணமாக பின்புலத்தில் இருந்து கொண்டு சிலரைத் தூண்டிவிடுகிறது.
அதன் காரணமாகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் உள்ளது. தற்போது கடைகள் பெற்றுள்ள 300 பேரும், யாருக்கும், எதற்காகவும் பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் கடைகளைப் பெற்றுள்ளனர்.
கடைகளை முறைப்படுத்தும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அழகான மெரினாவை எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச்செல்ல முடியாது.
மெரினா கடற்கரை ஒன்றும் வியாபாரத் தலம் அல்ல. அங்கு கடைகள் அமைப்பதை யாரும் உரிமையாக கோர முடியாது. அதிகாரிகளுடன் இணைந்து நாங்கள் நேரடி கள ஆய்வு செய்ததன் அடிப்படையில் நீலக்கொடி மண்டலங்களுடன் சர்வதேச அந்தஸ்துக்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கு ஒருபோதும் இடையூறு செய்யக் கூடாது. இந்த இடையீட்டு மனுக்கள் மீது பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும்'' எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.