

பைக்கின் லைட்டை தவறுதலாக சேதப்படுத்தியதற்காக மன்னிப்பு கடிதத்துடன் ரூ.200 வைக்கப்பட்டிருந்தது.
சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுத்திவைக்கப்பட்ட பைக்கின் லைட்டை தவறுதலாக சேதப்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்பு கடிதத்துடன் ரூ.200-ஐ வைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநில மக்களும் உள்நோயாளியாகவும், புற நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
இருசக்கர வாகனங்களில் வருவோர் மருத்துவமனை வளாகத்திலேயே அதை நிறுத்திவிட்டு செல்வார்கள். அப்படி, சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்க்க வந்த நபர் ஒருவர் தனது பைக்கை இரு தினங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு மருத்துவமனை வார்டுக்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்துக்கு பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, அவரது பைக்கின் பின்புற சிகப்பு நிற லைட் உடைந்திருந்தது. இதைக் கண்ட அவர், தனது வாகனத்தை யார் சேதப்படுத்தியது என கோபத்துடன் அங்கும், இங்கும் பார்த்துள்ளார். திட்டிவிட்டு பைக்கை எடுக்க முயன்றபோது, அதில் மாட்டியிருந்த ஹெல்மெட்டில் ஒரு சிறிய காகிதம் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதை திறந்து பார்த்தபோது அதில், ‘பைக் லைட்டை உடைத்ததற்கு மன்னிக்கவும்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும், அதனுடன் 2 நூறு ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. லைட்டை சரி செய்து கொள்வதற்காக இந்த 200 ரூபாய் வைக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அந்த நபர் நெகிழ்ச்சி அடைந்தார். மேலும் இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். ``லைட்டை சேதப்படுத்திய நபர் எதுவும் தெரியாததுபோல் கடந்து சென்றிருக்கலாம்.
ஆனால் தவறு நிகழ்ந்ததற்கு வருந்தி, மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்ததோடு, இழப்பீடாக பணத்தையும் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இந்த நல்லகுணம் மனித நேயத்தை உயிர்ப்பூட்டுவதாக உள்ளது'' என சமூக வலைதளத்தில், பலரும் பின்னூட்டல் மூலம் கொண்டாடி வருகின்றனர்.