

நீதிபதி செம்மல்
சென்னை: காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி செம்மலை இடைநீக்கம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றியவர் செம்மல். அவரது தனி பாதுகாவலராக இருந்த போலீஸ்காரர் லோகேஷ்வரன் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், பூசிவாக்கம் பகுதியில் பேக்கரி நடத்தும் லோகேஷ்வரனின் மாமனார் சிவக்குமாருக்கும், பேக்கரிக்கு வந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இதுதொடர்பாக இருதரப்பும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸ் காரர் லோகேஷ்வரன், அவரது மாமனார் சிவக்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அதன்பிறகு அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய நீதிபதி செம்மல், இந்த வழக்கில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டார்.
தனது பாதுகாவலர் லோகேஷ்வரனுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைக்காக, டிஎஸ்பியை கைது செய்ய நீதிபதி செம்மல் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி காஞ்சிபுரம் எஸ்.பி. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், டிஎஸ்பியை கைது செய்யபிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீதிபதி செம்மல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, விசாரணை நடத்திய விஜிலென்ஸ் பதிவாளர் தனது அறிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதியிடம் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்ட லோக் அதாலத் நீதிபதியாக செம்மல் இடமாற்றம்செய்யப்பட்டார்.
இதற்கிடையே, தனக்கு எதிரான விஜிலென்ஸ் விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்செம்மல் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அரியலூர் மாவட்ட லோக் அதாலத் நீதிபதியான செம்மலை இடைநீக்கம் செய்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.