

பல்லாவரம்: சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.19.63 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, 24 பெட்டிகளில் மொத்தம் 13 கிலோ தங்க நகைகள், 34 கிலோ வெள்ளி நகைகள் என மொத்தம் ரூ.19.63 கோடி மதிப்பிலான நகைகளை பிரபல நகைக்கடைக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது.
ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த சிவசங்கர் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1.08 லட்சம் பணத்தை கைப்பற்றி அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கோவிலாஞ்சேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியில் இருந்த மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த பூமணி (30) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை கைப்பற்றி, தாம்பரத்தில் உள்ள அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தமாகா சென்னை மாவட்ட செயலாளராக இருப்பவர் பிஜூ சாக்கோ (57). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். பெரம்பூரில் வசிக்கிறார். இவர் நேற்று முன் தினம் காலை நண்பர் வினோத் (40) என்பவருடன் காரில் சென்றார். ஓட்டேரி பகுதியில் சென்ற போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீஸார் இணைந்து காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, காரில் ரூ.1.19 லட்சம் பணம் இருந்தது. அது ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான பணம் என்று பிஜு தெரிவித்துள்ளார். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.