

சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரை, முதல்வர் விஜய் முன்னிலையில் பேரவைத் தலைவர் இருக்கையில், அவை முன்னவர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் அமர வைத்தனர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாழ்த்துத் தெரிவித்து சட்டப்பேரவையை நடுநிலையோடு வழிநடத்த வலியுறுத்தினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இதையடுத்து 17-வது சட்டப் பேரவையின் நிரந்தரத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
தவெக சார்பில் பேரவைத்தலைவர் பதவிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகரும், துணைத்தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி எம்எல்ஏவான ரவிசங்கரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.
சட்டப்பேரவை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியதும், இதற்கான அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவை முன்னவர் செங்கோட்டையன் இணைந்து ஜேசிடி பிரபாகரை பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, பேரவைத் தலைவர், துணைத் தலைவரை வாழ்த்தி அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:
முன்னாள் முதல்வர் பழனிசாமி: மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பது எதிர்க்கட்சிகளின் கடமை. எனவே, எந்தளவுக்கு நீங்கள் எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்கள் அரசு சிறப்பாக செயல்படும்.
அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி: எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் பின்பற்றி வந்த நீங்கள் மிகவும் பண்பானவர். இந்த பேரவையை நடுநிலையோடு வழிநடத்த வேண்டும். அவையின் மரபையும் காக்க வேண்டும்.
காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார்: பேரவை என்பது வெறும் விவாத அரங்கமல்ல. மக்களின் உரிமைகளும், உணர்வுகளும் பிரதிபலிக்கும் ஜனநாயக கோயில். அதை பாதுகாக்கும் வகையில் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சி தரப்புக்கும் சமநீதியுடன் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
மேலும், சவுமியா அன்புமணி (பாமக), ஆர்.செல்லசுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்),வன்னியரசு (விசிக), ராஜேந்திரன் (மதிமுக), பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக), காமராஜ் (அமமுக), சையத் பாரூக்பாஷா (ஐயூஎம்எல்), போஜராஜன் (பாஜக), தமிமுன் அன்சாரி (மஜக), நித்தியானந்தன் (கொமதேக) ஆகியோரும் வாழ்த்தி பேசினர்.
அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.