

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ- ஜியோ சார்பில் சென்னை உள்படஅனைத்து மாவட்டங்களிலும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின்கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், நெல்லை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கே.சாந்தகுமார், அந்தோணிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான மு.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டம்உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் உரிமை மட்டுமல்ல அவர்களின் வாழ்வாதாரம், சமூக மேம்பாடு, நாட்டின் பொருளாதாரம் சம்பந்தப் பட்டது. ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்னும் திமுக அரசு அதை நிறைவேற்றவில்லை.
எனவே, எங்கள் போராட் டத்தை தீவிரப்படுத்தும் வகையில் ஜன.6 முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்த உள்ளோம். அந்த போராட்டத்தை அரசு அடக்குமுறை கொண்டு ஒடுக்கினாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான கு.வெங்கடேசன், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் டேனியல் ஜெயசிங், நம்பிராஜன், ஏழுமலை, என்.சுபீன், ரமேஷ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக நிர்வாகி அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.