

திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகனான ஆராய்ச்சியாளர் கே.எம்.கே.கலிலூர் ரஹ்மான்(59) திருச்சி அப்போலோ மருத்துவமனையில் ஆக.1 இரவு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவருக்கு மனைவி ரஷிதாபானு, மகன் முஹம்மது, மகள் சபா ஆகியோர் உள்ளனர். திருச்சி காஜா நகர் காயிதே மில்லத் தெருவில் உள்ள காதர் மொகிதீன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலிலூர் ரஹ்மான் உடலுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.பி.ரவூப் ஹக்கீம், தமிழக அமைச்சர்கள் ரமேஷ், ஏ.எம்.ஷாஜஹான், விஸ்வநாதன், முஹம்மது பர்வேஸ், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ்பொய்யாமொழி, சி.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர்.
கலிலூர் ரஹ்மான் உடலுக்கு நேற்று மாலை திருச்சி காஜா நகர் அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் அஸர் தொழுகை, ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, காஜாமலை அடிவாரம் அருகில் உள்ள கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் விஜய்: தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் காதர் மொகிதீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: துயர் தாளாது வேதனையில் வாடும் காதர் மொகிதீனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன்.
இதேபோல், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க. தலைவர் கி.வீரமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.