

சென்னை: புதிய பர்மிட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுள்ளதாக கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து முதல்வருக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட் வழங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 270 பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டன.
இதனையடுத்து 300 பர்மிட்களுக்கான அனுமதி கடந்த ஒரு மாதமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஏற்கெனவே பர்மிட் பெற்று, காலாண்டு சாலை வரியாக ஒரு பேருந்துக்கு ரூ.1.50 லட்சம் செலுத்தியும், போக்குவரத்து ஆணையரின் இறுதி ஒப்புதல் கிடைக்காததால் பல பேருந்துகளை இயக்க முடியாமல் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த துறை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் ரூ.900 கோடி நேரடி வருவாயும், ரூ.3 ஆயிரம் கோடி மறைமுக வருவாயும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் உள்ள 22 எல்லை சுங்கச் சாவடிகளிலும் ஒரு வாகனத்துக்கு ரூ.500 முதல் ரூ.3,000 வரை கையூட்டு பெறப்படுகிறது. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 150 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும் என்ற நிலை உள்ள போது, தினசரி 1,200 பேருந்துகள் இயக்கப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கோயம்பேடு சி.எம்.டி,ஏ பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்துகளின் பயன்பாட்டுக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வழங்க வேண்டும். முதல்வர் இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.