

| படம்:எம்.முத்துகணேஷ் |
மாமல்லபுரம்: திருக்கழுகுன்றத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை வழங்கக் கோரி, இருளர் மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை சார்பில், 2-வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில், மாமல்லபுரம் குறுவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
மேலும், மாமல்லபுரத்தில் கடற்கரையோரம் தங்கியுள்ள 40 குடும்பங்களை சேர்ந்த இருளர் இன மக்கள், பலமுறை மனு அளித்தும் தங்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க எந்தவித நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக்கூறி, ஜமாபந்தியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜ் ஜமாபந்திக்கு நேரில் வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதில், அடையாள அட்டைகள் இல்லாததால், தங்களின் குழந்தைகளை பள்ளியில் கூட சேர்க்க முடியாத நிலை உள்ளதாகவும், நடுவக்கரை ஊராட்சியில் இடம் ஒதுக்கி பட்டா வழங்கிய நிலையில், தங்களுக்கான நிலம் எதுவென இதுவரை தெரியவில்லை எனவும் கூறினர்.
இதையடுத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரி, “வரும் சனிக்கிழமை, உங்களது பகுதியில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, முகாமில் பங்கேற்று உங்களுக்கு தேவையான ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை பயன்பெறுங்கள்” என தெரிவித்தார்.
மேலும், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனுக்களை, பொதுமக்கள் எம்எல்ஏவிடம் வழங்கினர். இதில், துணை வட்டாட்சியர் சந்திரசேகர் உள்பட வருவாய்த் துறையினர், மக்கள் கலந்து கொண்டனர்.
மணமை ஊராட்சியின் முன்னாள் தலைவர் வீராசாமி வழங்கிய மனுவில், “பக்கிங்காம் கால்வாயில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும். அவற்றுக்கு மின் இணைப்பு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஏரியில் நீர் நிரம்பி செல்லும் கலங்களை தடுத்து, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சாதகமாக கலங்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், புதிதாக பொறுப்பேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.