

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் நாளை (மார்ச்.22) முடிவடைகிறது. இன்னும் இழுபறியில் இண்டியா கூட்டணி உள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது.
தேர்தல் இவ்வளவு சீக்கிரமாக அறிவிக்கப்படும் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்ப்பார்க்கவில்லை. தொகுதி பங்கீடு முடிவு ஏற்படாததால் முதல் இரு நாட்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் யாரும் செய்யவில்லை. 18-ம் தேதி அமாவாசை என்பதால் அன்றைய தினத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவு ஏற்படாமலேயே காங்கிரஸ், திமுக, லஜக உள்ளிட்ட கட்சியினர், சுயேட்சைகள் மனுதாக்கல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மறுநாள் வியாழக்கிழமை அமாவாசைக்கு மறுநாள் என்பதால் அதிகளவில் மனுதாக்கல் செய்யவில்லை.
ஆனால், வேட்பு மனுதாக்கல் தொடங்கிய நான்காவது நாளான வெள்ளிக்கிழமையன்று கூட்டணி முடிவு ஏற்படாமலேயே இழுபறி இருந்த நிலையிலும் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன், பேரவைத்தலைவர் செல்வம், பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எதிர்க்கட்சித்தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், சந்திர பிரியங்கா உட்பட மாநிலம் முழுவதும் இதுவரை 135 மனுக்கள் தாக்கலாகியுள்ளன.
இந்நிலையில் நாளை திங்கள்கிழமை வேட்பு மனுதாக்கல் மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது. அதே நேரத்தில் பாஜக தரப்பில் மட்டுமே போட்டியிடும் 10 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்ஆர்காங்கிரஸ், அதிமுக, லஜக ஆகியோர் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக முழுமையாக அறிவிக்கவில்லை.
இதேபோல் இண்டியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கான வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இண்டியா கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த பரபரப்பான சூழலில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைகிறது.