

சென்னை: வார கடைசி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 885 பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முகூர்த்த தினமான இன்று (4-ம் தேதி) மற்றும் வார கடைசி நாட்களை முன்னிட்டு (5, 6, 7 தேதிகள்) சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 295 பேருந்துகளும், நாளை 480 பேருந்துகளும் மற்றும் 6-ம் தேதி சனிக்கிழமை 495 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜுன் 4, 5, 6 ஆகிய தேதிகளில் 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 25 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று 4,097 பயணிகளும், நாளை 8,541 பயணிகளும், சனிக்கிழமை அன்று 4,972 பயணிகளும், மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 10,079 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.