''இன்னும் 49 நாட்களில் மக்கள் துணையுடன் திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம்'' - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி

அன்புமணி

Updated on
1 min read

சென்னை: ‘இன்னும் 49 நாட்களில் மக்கள் துணையுடன் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உழைக்க பாமக உறுதியேற்றுக் கொள்கிறது’ என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இந்தத் தேர்தலை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது.

தமிழ்நாடு மிக மோசமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு ஆட்சியாளர்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது கஞ்சா ராஜ்ஜியம் என்று கூறும் அளவுக்கு மூலைக்கு மூலை கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களும் விற்கப்படுகின்றன. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடவே முடியாது எனும் அளவுக்கு அவர்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டன.

தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் தான் தழைத்தோங்கியுள்ளது. பணியாளர்களை நியமிப்பதில் ஊழல், சாலை அமைப்பதில் ஊழல், பாலம் கட்டுவதில் ஊழல், மணல் அள்ளுவதில் ஊழல், நெல் கொள்முதலில் ஊழல், மது வணிகத்தில் வரி ஏய்ப்பு ஊழல், மின்சாரம் கொள்முதலில் ஊழல், பணியிட மாற்றம் வழங்குவதில் ஊழல் என அனைத்திலும் ஊழல் தான். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 6,00,00,00,00,000 ( ரூ. 6 லட்சம் கோடி) ஊழல் செய்து திமுக சாதனை படைத்திருக்கிறது.

திமுக ஆட்சியை அகற்றுவதன் மூலம் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான முன்னேற்றத்தைத் தர முடியும், பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்க முடியும், மது மற்றும் கஞ்சா போதையில்லா தமிழகத்தை உருவாக்க முடியும், உண்மையான விடுதலையை வழங்க முடியும். இதை உணர்ந்து இன்னும் 49 நாட்களில் மக்கள் துணையுடன் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உழைக்க பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்றுக் கொள்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அன்புமணி </p></div>
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23ல் ஒரே கட்டமாக தேர்தல்: மே.4ல் வாக்கு எண்ணிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in