

பாரிவேந்தர்
தேர்தலுக்காக, இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதுவரை சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைக்காத ஐஜேகே, இம்முறை அதைச் சாத்தியப் படுத்தும் நோக்கில் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், கட்சியின் நிறுவனர் தா.இரா.பாரிவேந்தரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.
15 ஆண்டுகள் கடந்த பிறகும் ஒரு சில மாவட்டங்களைத் தாண்டி ஐஜேகே அவ்வளவாக வளர்ச்சி பெறவில்லையே..?
ஒவ்வொரு கட்சித் தலைவரும் தக்களுக்கான பாணியில் கட்சியை நடத்தி, வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், நாங்கள் எங்களுக்கான ஒரு பாதையை அமைத்துக்கொண்டு கட்சியை நடத்துகின்றோம்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூரில் போட்டியிட்ட நீங்கள் பேரவைத் தேர்தலில் எங்கே போட்டியிடப் போகிறீர்கள்?
சட்டபேரவைத் தேர்தலில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் மற்றும் தகுதியுள்ள பிற பொறுப்பாளர்களும் போட்டியிடுவார்கள்.
என்டிஏ கூட்டணியில் நீடிக்கும் நீங்கள் இம்முறை எத்தனை தொகுதிகளைப் பெற உத்தேசித்துள்ளீர்கள்?
ஏழு தொகுதிகளைக் கேட்கிறோம். மூன்று முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு முறை வென்றுள்ள எங்களுக்கு 6 அல்லது 7 தொகுதிகளை ஒதுக்குவது தான் நியாயமாக இருக்கும்.
தேர்தலில் எதை முன்வைத்து பிரச்சாரம் செய்ய உள்ளீர்கள்?
நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து என்றெல்லாம் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்றுவரை எதையும் செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதிகளில் 15 சதவீதம் மட்டுமே செய்திருப்பதாக மக்கள் பேசுகிறார்கள். தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை நெருங்குகிறது. இதற்கு வட்டி கட்டி, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து, ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் கொடுத்த பிறகு கையில் இருப்பு எதுவும் இல்லை. இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது எதற்காக என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
என்டிஏ கூட்டணியில் பாஜக, அதிமுக, தமாகா தவிர மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லையே..?
வெளியில் தெரியாமல் இருக்கலாம். மற்ற கட்சிகளுடனும் நல்ல புரிதல் இருக்கிறது. எனவே, என்டிஏ கூட்டணி உறுதியாக வெற்றிபெறும்.
விஜய் கட்சி இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமோ?
அரிய வாய்ப்பை தம்பி விஜய் இழக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு உள்ளது. ஒருமுறை வாய்ப்பைத் தவறவிட்டால் இந்தப் போட்டி மீண்டும் கிடைப்பது அரிது. விஜய் புரிந்துகொள்வார் என எண்ணுகிறேன்.
திமுக-வையும் பாஜக-வையும் ஒருசேர எதிர்க்கும் விஜய் இம்முறை ஆட்சி அதிகாரத்தை பிடிப்பாரா?
கற்பனையாகத் தோன்றுகிறது. விஜய் தனது சிறந்த குணங்களாலும், அடக்கமான பழக்கவழக்கத்தாலும் மக்களால் போற்றப்படுபவர். ஆனால், அரசியலில் அனுசரித்துப் போவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தங்களை இந்துகளுக்கு எதிரானவர்களாக பாஜக கட்டமைக்கப் பார்ப்பதாக திமுக குற்றஞ்சாட்டுகிறதே?
அவரவரின் தெய்வத்தை வழிபட அவரவருக்கு உரிமை உண்டு. சிக்கந்தர் தர்காவில் வழிபட எந்த இந்துக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேசமயம், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கும் இஸ்லாமியர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்துக்கள் மலைமேல் அமைந்திருக்கும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் மற்ற சமயத்தினருக்கு என்ன பிரச்சினை? இத்தனை ஆண்டுகளாக ஏற்றவில்லை என்பதால், தற்போது அதை ஏற்றக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது.
தேர்தலில் நான்கு முனை போட்டி உருவானால் களம் யாருக்குச் சாதகமாக இருக்கும் என கணிக்கிறீர்கள்?
நான்கு முனை போட்டி என்றால் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறியாகக்கூட வருவதற்கு வாய்ப்புள்ளது.
எஸ்ஐஆர் பற்றி உங்கள் கருத்து?
எஸ்ஐஆர் மிக மிக அவசியமான ஒன்று. உண்மையான வாக்காளர் பட்டியலை கொண்டுவருவதால் யாருக்கும் எந்தப் பாதகமும் ஏற்படாது. அதற்கு மாறாக, பொய்யான வாக்காளர்களைக் கொண்டு போலியான வாக்குகளை பதிவு செய்வதை தடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
தேசிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்காததால், சமக்ரா சிக் ஷா அபியான் (SSA) உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக சொல்வதை ஒரு கல்வியாளராக எப்படி பார்க்கிறீர்கள்?
மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவரும்போது, அதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் நல்லது. பின்பற்றாவிட்டால் மாநில அரசுக்கும் மக்களுக்குமே அது இழப்பு.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து..?
இலவசங்களை அறிவித்து, மக்களை சோம்பேறிகளாக்கி உழைப்பைத் தவிர்க்கும் எந்த மாநிலமாக இருந்தாலும் அவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றே பொருள்.
உயர்த்தப்பட்ட சொத்துவரி, மின் கட்டணம், பால் கட்டணம் - இவை எல்லாம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
உறுதியாக ஏற்படுத்தும். இதைவிடவும், அனைத்து அரசு அலுவலகங் களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக மக்கள் பெரிய அளவில் பேசிக்கொள்கிறார்கள். அதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிமுக-விடம் தொகுதிப் பட்டியல் ஏதும் தந்திருக்கிறீர்களா... அது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லையே..?
எங்களுக்கு என்டிஏ-வுடன் நல்ல புரிதல் இருக்கிறது. ஆகவே, ஐஜேகே திருப்தி அடையும் வகையிலான தொகுதிகளை எங்கள் தோழமைக் கட்சிகள் கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.