

சென்னை: மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தமிழர்கள் அதிக அளவில் பணிக்கு சேர வேண்டும் என்று தென் மண்டல ஐ.ஜி. சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
போதைப் பொருள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தல், குறித்த விழிப்புணர்வு மற்றும் தேசப்பற்றை மக்களிடம் அதிகரிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள கடலோர கிராமங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சிஐஎஸ்எப் தென் மண்டல ஐ.ஜி. எஸ்.ஆர்.சரவணன், சென்னை விமான நிலைய டிஐஜி பொன்னி ஆகியோர் கூறியதாவது: சிஐஎஸ்எப் படையினரின் ‘சைக்ளோதான்-2026’ நிகழ்வை, டெல்லியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஜன.28-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இந்த பயணம் 25 நாட்கள் கொண்டது. 65 பெண்கள், 65 ஆண்கள் என 130 பேர் பங்கேற்கின்றனர். அதில் 11 பேர் தமிழர்கள். குஜராத்தின் லக்பத் கோட்டை, மேற்கு வங்கத்தின் பக்காலியில் இருந்து ஒரே நேரத்தில் 2 சைக்கிள் குழுவினர் புறப்பட்டு பிப்.22-ம் தேதி கொச்சியில் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
சிஐஎஸ்எப் படையில் புதிதாக 14 ஆயிரம் பேரை பணிக்கு எடுக்கிறோம். சென்னை போன்ற விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு வீரர்களை நியமிக்கும்போது, 30% பேர் அந்தந்த மாநிலத்தவர், 30% பேர் அண்டை மாநிலத்தவர், மற்ற 40% பேர் வடமாநிலத்தவர் என இருப்பார்கள்.
ஆனால், இங்கு தமிழக வீரர்கள் 30% பேர் பணியில் இருப்பதில்லை என்ற விமர்சனம் எழுகிறது. சிஐஎஸ்எப் படையில் தமிழர்கள் அதிக அளவு சேராதது தான் இதற்கு காரணம். தமிழர்கள் அதிக அளவில் சிஐஎஸ்எப் படையில் சேர வேண்டும் என்றனர்.