

ஜெகன்மூர்த்தி | கோப்புப் படம்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வந்தால் 100 சதவீதம் வெற்றி உறுதி என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று திருவள்ளூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவின் பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சாகவும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சாகவும் இருக்கிறது.கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்டு இறுதியாக 2 தொகுதிகளை கொடுங்கள் என்று கேட்டிருந்தோம்.
ஆனால் ஒரு தொகுதி தான் கொடுத்தார்கள். இந்த முறை 6 தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 4 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பொதுத் தொகுதிகளை நாங்கள் கேட்கவில்லை. அத்தொகுதிகளை கொடுத்தால் போட்டியிடுவோம். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யார் வந்தால் சரியாக இருக்கும் என்று மக்கள் தீர்மானிப்பார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வந்தால், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகவெற்றிக் கழகம் வரவில்லை என்றாலும், ஆட்சி அமைக்கும் அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.