

சென்னை: மின்வாரிய ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு விவரம்:
தமிழ்நாடு மின்வாரியம், மின் உற்பத்தி கழகம், பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம், பசுமை எரிசக்திக் கழகம் ஆகிய அனைத்து பிரிவு ஊழியர்களும் அலுவலக வளாகத்துக்குள் நுழையும்போதும், பணி நேரத்திலும் அடையாள அட்டையை வெளியில் தெரியும்படி கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு பணியாளர்கள், அதிகாரிகள் சோதனையிடும்போது தயக்கமின்றி அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.
ஊழியர்கள் இதை முறையாகப் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அலுவலகப் பாதுகாப்பு மற்றும் வெளி நபர்களை எளிதாகக் கண்டறியும் நோக்கில் இந்த பழைய உத்தரவு தற்போது மீண்டும் தீவிரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.