

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் தொடங்கப்படாமல் இருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதியை ரத்து செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அறநிலையத் துறை சார்பில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நீதிமன்ற தடையாணை காரணமாகவும், சம்பந்தப்பட்ட கோயில்களின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டும் தற்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, தற்போது வரை தொடங்கப்படாத ரூ.115.77 கோடி மதிப்பீட்டிலான 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ.130 கோடி மதிப்பீட்டிலான 17 வணிக வளாகங்கள் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பீட்டிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியை கொண்டு கோயில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.