

நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
சென்னை: ‘அருண்ராஜ் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், அரசு அமைச்சர்கள் எல்லாம் இனி அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம் என வீராப்பாக வசனம் பேசினார். இதுவரை எத்தனை அமைச்சர்கள் எந்த அரசு மருத்துவமனையில் எம்மாதிரியான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார்கள் என்ற அறிக்கையை வெளியிட முடியுமா?’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருவள்ளுவரின் உடை விஷயத்தில் ஆர்வம் காட்டிய நீங்கள், தமிழக மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் அமைச்சர் அருண்ராஜ்?
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகியான 19 வயது ஆகாஷ் என்பவருக்கு பாம்பு கடித்ததாகவும், சிகிச்சைக்காக அவரை வி.கே.புதூர் அரசு மருத்துவமனை, ஆலங்குளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற போது கதவைக் கூட திறக்காமல் ஊழியர்கள் காட்டிய அலட்சியத்தால் ஆகாஷ் அநியாயமாக உயிரிழந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதறச் செய்கின்றன.
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, அரசு மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பொருட்படுத்தாமல், நீங்களும் உங்கள் முதல்வரும் திருவள்ளுவரின் மதத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு.
நீங்கள் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், அரசு அமைச்சர்கள் எல்லாம் இனி அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம் என வீராப்பாக வசனம் பேசினீர்களே, இதுவரை எத்தனை அமைச்சர்கள் எந்த அரசு மருத்துவமனையில் எம்மாதிரியான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார்கள் என்ற அறிக்கையை வெளியிட முடியுமா? அப்படி ஏதாவது ஓர் அமைச்சர் அரசு மருத்துவமனையின் பக்கம் தலை காட்டியிருந்தால் கூட, இந்நேரம் அவற்றின் தரம் ஓரளவு உயர்ந்திருக்கும்.
இனியாவது, எளிய மக்களின் உயிர்களை அலட்சியப்படுத்தாதீர்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு தரமான சிகிச்சைகளுக்கு வழிவகுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.