

சென்னை: “விஜய் ஒரு பெரிய அரசியல் தலைவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு போய்விட்டது. அதனால் அந்தக் கட்சியிலிருந்து வெளியே வந்துவிட்டேன்” என தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மகளிரணி நிர்வாகியாக இருந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதற்கு முன்பு பாஜகவில் இருந்த ரஞ்சனா, சில மாதங்களுக்கு முன்பாக தவெகவில் இணைந்தார்.
இந்தச் சூழலில், விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் தொடர்பாக விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் பல்வேறு விமர்சனங்களை பொதுவெளியில் முன்வைத்தார். இதனையடுத்து, அவர் தவெகவில் இருந்து விலகி இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சனா நாச்சியார், “எனது எண்ணங்களும், எனது கொள்கைகளும் இணைந்து பயணிக்க கூடிய இயக்கம் திமுக. அந்த வகையில் திமுகவில் இணைந்துள்ளேன். எங்கள் பாரம்பரியத்தை சேர்ந்த வேலு நாச்சியாரை கொள்கை தலைவராக விஜய் அறிவித்ததால் திமுகவில் இணைந்தேன்.
ஆனால், தவெகவில் தொடர்ந்து பெண்கள் புறக்கணிப்பும், அவமரியாதையும் நடந்துகொண்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பை திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது. தேர்தலுக்கு 30 நாட்களே உள்ள நிலையில், இன்னமும் விஜய்யால் மக்களை சந்திக்க வெளியே வரவில்லை. அவரால் இனியும் வெளியே வரமுடியாது என்பது தெரிகிறது. ஏதாவது பிரச்சினை என்றால் விஜய்யும் வரமாட்டார், நிர்வாகிகளும் ஓடி ஒளிந்துக் கொள்வார்கள்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட தவெகவினர் மக்களிடம் செல்லவில்லை. மேடைப் பேச்சுக்கு 4 பேர் இருந்தால் கட்சியை நடத்தி விடலாம் என தவெக நினைக்கிறது. பொறுக்கித் தனம் செய்வது அல்ல அரசியல், பொறுப்போடு நடந்துகொள்வதே அரசியல். விஜய் ஒரு பெரிய அரசியல் தலைவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு போய்விட்டது. அதனால் அந்தக் கட்சியிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.
மதவாத கட்சியோடு சேர்ந்து பயணிக்க மாட்டோம் என விஜய் சொல்கிறார். ஆனால், ஆதவ் அர்ஜுனா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்கிறார். இதில் எதனை நம்புவது? ஆதவ், ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்தை வைத்து கட்சியை நடத்தலாம் என விஜய் நினைப்பது முட்டாள்தனம். தவெக ஒரு மர்மமான முறையில்தான் நடக்கிறது. பொய் நம்பிக்கைகளை விதைத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது தவெக” என்றார் ரஞ்சனா நாச்சியார்.