

மதுரையில் பூர்ணசந்திரன் படத்துக்கு அஞ்சலி செலுத்திய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
மதுரை: திமுக அரசுக்கு முருக பக்தர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிரிழந்த பூர்ண சந்திரனின் 16-ம் நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற காடேஸ்வரா சுப்ரமணியம், பூர்ணசந்திரன் படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி தன்னையே தியாகம் செய்த பூர்ண சந்திரன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
பூர்ண சந்திரன் கடவுள் இல்லை என்று கூறிய பெரியார் சிலை முன்பு தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார். அவரது தியாகம் வீண் போகாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் அரசு தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றத் தவறினால், இந்து முன்னணியினர், முருக பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்.
இந்து கோயில்கள், இந்து கடவுள்கள், இந்து பெண்கள் குறித்து திருமாவளவன் அவதூறு பேசியுள்ளார். திமுக எம்.பி. கனிமொழியும் முருக பக்தர்களை கொச்சைப்படுத்தி வருகிறார். இவர்களுக்கு முருக பக்தர்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.