“போதை குற்றங்களை தடுக்க தவெக அரசு மேம்போக்காக செயல்படுகிறது” - இந்து முன்னணி குற்றச்சாட்டு

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.
Updated on
1 min read

சென்னை: ‘தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் நடமாட்டம், போதையால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். கடந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கருதியது இந்த போதை குற்றங்கள் தான் முதன்மையானது ஆகும். இந்த ஆட்சியிலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து போதை பொருளின் நெட்வொர்க்கை கண்டறியாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது’ என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நேற்று இரவு ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள போலீஸ் கண்காணிப்பு அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த தணிகாசலம் என்பவரை துடிக்கத்துடிக்க கொன்று விட்டு தப்பிச் சென்று இருக்கிறது ஒரு கும்பல்.

தணிகாசலம் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் காவல்துறை குறிப்புகளில் இந்து முன்னணி பொறுப்பாளர் என்றுள்ளது. பல ஆயிரம் மக்கள் இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி பெருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இது பொதுநிகழ்வு ஆகும். அதனால் இந்து முன்னணி பொறுப்பாளர் கொலை என்று செய்திகளில் வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் நடமாட்டம், போதையால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். இளம் பெண்கள் கஞ்சா போதையில் சாலைகளில் ரகளை செய்யும் காணோளி தமிழகத்திற்கு தலைகுனிவு.

கடந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கருதியது இந்த போதை குற்றங்கள் தான் முதன்மையானது ஆகும். இந்த ஆட்சியிலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து போதை பொருளின் நெட்வொர்க்கை கண்டறிந்து துடைத்தெறியாமல் மேம்போக்காக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது போன்ற சம்பவங்களால் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று சுட்டிக் காட்டுகிறோம். குற்றங்கள் நடக்க காவல்துறை வழக்கமான ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதான பயம் இல்லாத காரணமே முதன்மையானது. அதனால் தான் துணிந்து இதுபோன்ற கொடூர குற்றங்களைச் செய்யும் துணிவு அவர்களுக்கு வருகிறது.

கொலையுண்ட தணிகாசலம் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குக்கு கடுமையான தண்டனை வழங்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதல்வர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி விரைவாக காவல்துறை செயல்பட அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.
திண்டுக்கல் அருகே பால் வேன் மோதியதில் 4 சிறுமிகள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in