

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இது வரும் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். குறிப்பாக, 24, 25, 26 ஆகிய 3 நாட்களும் உச்சகட்டபாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது.
விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பாதுகாப்பு படையினர் பிரதான நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனர். தவிர, மெட்டல் டிடெக்டர்கள் மூலம் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்கின்றனர். விமான நிலைய வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
வாகன நிறுத்தப் பகுதியில் நீண்டநேரமாக நிற்கும் கார்கள், பைக்குகள் போன்ற வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மோப்ப நாய்களுடன், விமான நிலையத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் விமானங்கள் நிற்கும் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, பார்சல் ஏற்றும்பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விமானத்தில் திரவப் பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில் போன்ற பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வழக்கமாக நடைபெறும் சோதனை மட்டுமின்றி, விமானத்தில் ஏறும்போது, மேலும் ஒரு முறைபாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. இதனால், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாகவும் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.