

மதுரை: உறுப்பினர்கள் அல்லாதோருக்கும் மதுபானம் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக தமிழகம் முழுவதும் மனமகிழ் மன்றங்களில் கூட்டு ஆய்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் திடீர் ஆய்வு நடத்தி சட்டவிரோதமாக மதுபான விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மன்றங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், விதிமுறைகளை மீறும் சங்கங்களின் பதிவை ரத்து செய்யவும், பள்ளி,கல்லூரி, மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்படும் மன மகிழ் மன்றங்களில் ஆய்வு செய்யவும், எப்.எல்-2 உரிமங்களை மறுஆய்வு செய்யவும் கடந்த 18.08.2025-ல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், கோயில்கள், பள்ளிகள்மருத்துவமனைகள், மசூதி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகே பல மனமகிழ் மன்றங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அவற்றில் போலி உறுப்பினர் பதிவுகள் மூலம் பொதுமக்களுக்குச் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் நோக்கத்துக்கு முரணாக வணிக ரீதியில் செயல்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் ஒரே நேரத்தில் திடீர் மறைமுக ஆய்வு நடத்தி, சட்டவிரோதமாகச் செயல்படும் மன்றங்களின் பதிவை ரத்து செய்தல், எப்.எல்-2 உரிமங்களை ரத்து செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். மாநில அளவிலான உயர்மட்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேலு அமர்வில் விசாரணைக்கு வந்ததுபின்னர் நீதிபதிகள், மனுதாரர் வைக்கும் குற்றச்சாட்டு தீவிரமானது. மனமகிழ் மன்றங்களில் அங்கு உறுப்பினராக உள்ளோருக்கு மட்டுமே மது வழங்க வேண்டும். ஆனால் உறுப்பினர் அல்லாதோருக்கும் மது வழங்கப்படுகிறது என்பது ஏற்புடையதல்ல.
எனவே, மனமகிழ் மன்றங்கள் அவ்வப்போது ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மனுதாரர் குறிப்பிட்டுள்ள 8 மனமகிழ் மன்றங்களிலும் மதுரை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் கோட்டாட்சியர், மதுவிலக்குத் துறையினர், பதிவுத் துறையினர், காவல் துறையினர் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆக.13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.