

மதுரை: அனைத்து இடங்களிலும் ஊழல் ஆழமாக பேரூன்றியுள்ளது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள புகாரை விரைந்து விசாரிக்கக் கோரி அரசு ஊழியர்கள் பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகள் கவனமாக விசாரிக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் ஒழுங்கு நடவடிக்கைத் தீர்ப்பாயங்களில் மாவட்ட நீதிபதி தகுதியில் உள்ள நீதித்துறை அலுவலர்கள் அல்லது ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அமைய வேண்டும்.
ஊழல் வழக்குகளைத் திறம்படக் கண்காணிக்க ஊழல் தடுப்பு ஆணையர் அவசியம். இருப்பினும் மாநிலத்தில் நிரந்தர ஊழல் தடுப்பு ஆணையர் இல்லை. மூத்த அதிகாரி அந்தப்பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார்.
ஒவ்வொரு அரசும் தாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் எனக் கூறுகின்றன. ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது. அர்ப்பணிப்புடனும், தொடர் நடவடிக்கையால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். ஊழல் தடுப்பு ஆணையத்தையும், ஊழல் தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்புத் துறையை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதை அடைய முடியும். தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள மனுதாரர்கள் மனுக்களை 4 வார காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.