டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை: 1.40 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின
நாகப்பட்டினம்: ‘டிட்வா’ புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 1.40 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தமிழகத்திலேயே அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 31.20 செ.மீ. மழை பதிவானது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. மேலும், ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டிருந்த நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
நாகை மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரிலும், மயிலாடுதுறையில் 30 ஆயிரம் ஏக்கரிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடிப் பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக நாகை, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பூம்புகார், பழையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சீர்காழி, தரங்கம்பாடி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். மேலும், அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், ஆட்சியர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5-ம் எண் புயல் கூண்டு: கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மீன்பிடித் துறைமுகங்கள், கடற்கரைகளில் விசைப்படகுகள், நாட்டுப் படகு களை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், வடக்கு நோக்கி புயல் கடந்து செல்லும் என்பதைக் குறிக்கும் வகையில் நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் நேற்று 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
நேற்று பிற்பகல் நிலவரப்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் 31.20 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதேபோல, தோப்புத்துறையில் 20 செ.மீ., திருப்பூண்டியில் 20 செ.மீ., வேளாங்கண்ணி, வேதாரண்யத்தில் தலா 18 செ.மீ, நாகையில் 17 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. சென்னை, எண்ணூர், கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை: ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வகைப் பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
