

சென்னை: வங்கக் கடலில் நிலவும் `டிட்வா' புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதையொட்டி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 1.24 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில் ‘டிட்வா' புயல் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்காக நகர்ந்து இன்று (நவ.30) காலை வடதமிழகம் மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இன்று மாலை புயல் சென்னையை நெருங்கி வரும்.
இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சம் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 80 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகனமழை (‘ரெட் அலர்ட்’) பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையும், மற்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 25 செ.மீ., வேதாரண்யத்தில் 19 செ.மீ., வேளாங்கண்ணியில் 13 செ.மீ., திருப்பூண்டி, நாகையில் 12 செ.மீ., தலைஞாயிறில் 11 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், காரைக்காலில் 10 செ.மீ., தங்கச்சிமடம், ராமேசுவரம், தொண்டி, மண்டபம், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, நாகை மாவட்டம் திருக்குவளையில் 7 செ.மீ. மழை பதிவாகிஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1.24 கோடி பேருக்கு குறுஞ்செய்தி: புயல், மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களைத் தங்கவைக்க திருமண மண்டபங்கள், அவர்களுக்குத் தேவையான உணவு, குழந்தைகளுக்கு பால் போன்றவற்றை தயாராக வைக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மாநில பேரிடர் மீட்புப்படை சார்பில் 16 அணிகளும், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 12 அணிகளும் தயார் நிலையில் உள்ளன.
இதுவரை புயல், மழையால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. 16 கால்நடைகள் இறந்துள்ளன. 24 குடிசைகள் சேதமடைந்துள்ளன. புயல் வந்தால், அதை எதிர்கொள்வது தொடர்பாக 1.24 கோடி பேருக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் கடற்கரை ஓரமாகச் செல்வதை தவிர்க்க வேண்டும். புயல் நேரத்தில் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
4,000 கனஅடி வெளியேற்றம்: சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று மாலை முதல் விநாடிக்கு 4,000 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2,000 கனஅடியும், புழல் ஏரியிலிருந்து 1,500 கனஅடியும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.