

சென்னை: தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகநீடிக்கிறது. தெற்கு அந்தமான்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத் தில் இன்று சில இடங்களிலும், நாளை தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் 24-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.