

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் பெய்த பலத்த மழையால் பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடைகாலம் நிறைவடைந்தும், தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஜவ்வாதுமலை மற்றும் அதன் அடிவார கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்ததில் வறண்டு கிடந்த சுற்றுலாத் தலமான ஜவ்வாதுமலை பீமன் நீர்வீழ்ச்சியில் நேற்று முதல் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஜமுனாமரத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 37.20 மிமீ மழை பெய்துள்ளது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதில், திருவண்ணாமலையில் 6 மிமீ, செங்கம்-29, போளூர்-10.20, கலசப்பாக்கம் -19,தண்டராம்பட்டு-27.60, ஆரணி-4, சேத்பட்-8.40 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.