

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடருவதற்கான நடைமுறையை 2 மாதங்களில் முடிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நிலுவையில் உள்ளது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது, டெண்டர் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி, விஜய கார்த்திகேயனுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரியவிவகாரத்தில் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்து ஜூலை 22-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் துறை அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி வாயிலாக ஆஜரான மத்திய பணியாளர் துறை இணைச் செயலர் சுஷீல்குமார் பாட்டீலிடம், ‘‘குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்க இவ்வளவு தாமதம் செய்வது ஏன்?’’ என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுஷீல்குமார், ‘‘வழக்கு தொடர்பான ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் நிலுவையில் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ய அவகாசம் தேவை. அந்த ஆவணங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆணையம் அளிக்கும் பதில் அடுத்த வாரம் கிடைக்கும். அதன்பிறகு அவை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்துக்கே உள்ளது. இந்த நடைமுறைகள் முடிய 2 மாதங்கள் ஆகும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘இதுதொடர்பாக கடந்த 2025 நவம்பர் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை விளக்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். 2 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை 2 மாதங்களில் முடித்து, அதுகுறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவ.12-க்கு தள்ளி வைத்தார்.