அமைச்சர் நேரு மீது உடனே வழக்கு பதிவு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்துக்கு ரூ.1,000 கோடி லஞ்சம்
அமைச்சர் நேரு மீது உடனே வழக்கு பதிவு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
Updated on
2 min read

சென்னை: தமிழக நகராட்சி நிர்​வாகத் துறை​யில் பணிநியமனத்​துக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் லஞ்​சப் பணம் வசூலிக்​கப்​பட்​ட​தாக அமலாக்​கத் துறை அனுப்​பிய ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் அமைச்​சர் கே.என்​.நேரு உள்​ளிட்​டோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் உடனடி​யாக வழக்கு பதிவுசெய்​து, சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் முறை​கே​டாக டெண்​டர் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், உதவி பொறி​யாளர், இளநிலை பொறி​யாளர், நகரமைப்பு அலு​வலர் உள்​ளிட்ட 2,538 பணி​யிடங்​களுக்கு தலா ரூ. 25 லட்​சம் முதல் ரூ.35 லட்​சம் வரை லஞ்​சப் பணம் வசூலிக்​கப்​பட்​டு, பணி நியமனம் நடந்துள்​ள​தாக​வும் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடந்த 2025 அக்​.27-ம் தேதி கடிதம் அனுப்​பியது.

அதில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர்​களான ரவிச்​சந்​திரன், மணிவண்​ணனுக்கு சொந்​த​மான இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யின்​போது கிடைத்த ஆவணங்​களின் அடிப்​படை​யில் மிகப்​பெரிய முறை​கேடு நடந்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ள​தாக அமலாக்​கத் துறை தெரி​வித்​திருந்​தது.

நேரு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை மொத்தம் 3 முறை கடிதம் அனுப்பியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: அமலாக்கத் துறை அனுப்பியகடிதத்​தின் அடிப்​படை​யில் அமைச்​சர் நேரு, அவரது சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன் உள்​ளிட்​டோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்​கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஆதி​நா​ராயணன் மற்​றும் அதி​முக எம்​.பி. இன்​பதுரை ஆகியோர் சென்னை உயர்நீதி​மன்​றத்​தில் தனித்​தனி​யாக வழக்கு தொடர்ந்​தனர்.

தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணை ஏற்​கெனவே நடந்​தது. அப்​போது நடை​பெற்ற வாதத்​தின் விவரம்:

அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன்: அமலாக்​கத் துறை கடிதத்​தின் அடிப்​படை​யில் ஆரம்​பகட்ட விசா​ரணை நடந்து வரு​கிறது. அந்த கடிதம் அடிப்​படை​யில் மட்​டுமே நேரடி​யாக யார் மீதும் வழக்கு பதிவு செய்ய முடி​யாது. இந்த வழக்கை தொடர்ந்​துள்ள ஆதி​நா​ராயணன் மீது 6 கொலை மற்​றும் கொலை முயற்சி உட்பட 25 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. மற்​றொரு மனு​தா​ர​ரான அதி​முக எம்​.பி. இன்​பதுரை, தேர்​தல் நேரத்​தில் அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் இந்த வழக்கை தொடர்ந்​துள்​ளார்.

அமலாக்​கத் துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு வழக்​கறிஞர் என்​.ரமேஷ்: இந்த விவ​காரத்​தில் டிஜிபிக்கு வெறும் கடிதம் மட்​டுமின்​றி, அனைத்து குற்​றச்​சாட்​டு​களுக்​கும் டிஜிட்​டல் ஆவணங்​களை அனுப்பி அமலாக்​கத் துறை தனது கடமையை முறையாக செய்​துள்​ளது. அந்த ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் ஆரம்​பகட்ட விசா​ரணையே நடத்​தாமல், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நேரடி​யாகவே வழக்கு பதிவு செய்ய முடி​யும். ஆனால், தமிழக போலீ​ஸார் தங்​களது கடமையை செய்​ய​வில்​லை.

டிஜிபி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் விக்​ரம் சவுத்​ரி: வழக்கு தொடர்ந்​துள்ள மனு​தா​ரர்​களின் நோக்​கம் மற்றும் நம்​பகத்​தன்​மையை ஆராய வேண்​டி​உள்​ளது. வங்கி நிதி மோசடி தொடர்​பான சோதனை​யில் கிடைத்த ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடிதம் அனுப்​பி​யுள்​ளது. அந்த நிதி மோசடி வழக்கு ஏற்​கெனவே ரத்து செய்​யப்​பட்​டு​விட்​டது.

அதி​முக எம்​.பி. இன்​பதுரை தரப்​பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.​ராக​வாச்​சா​ரி: நகராட்சி நிர்​வாகத் துறை​யில் நடந்​துள்ள இந்த மிகப்​பெரிய மோசடியை அமலாக்​கத் துறை வெளிச்​சம் போட்​டுக் காண்​பித்​துள்​ளது. அதன் அடிப்​படை​யில் வழக்கு பதிவு செய்து விசா​ரிக்க வேண்​டிய போலீ​ஸார் ஆரம்​பகட்ட விசா​ரணை என்ற பெயரில் வேண்​டுமென்றே காலம் தாழ்த்தி வரு​கின்​றனர். இவ்​வாறு வாதம் நடந்​தது.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் நேற்று விரி​வான உத்​தர​வு பிறப்​பித்​துள்ளனர். அதில் கூறி​யிருப்​ப​தாவது: ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுதமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் நடந்​துள்ள இந்த முறை​கேடு மூல​மாக பல நூறு கோடி ரூபாய் லஞ்​சப்பணம் ஹவாலா முறை​யில் கைமாறி​யுள்​ள​தாக அமலாக்​கத் துறை ஆதா​ரப்​பூர்​வ​மாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது.

இந்த விவ​காரத்​தில் அரசு உயர் அதி​காரி​கள், அமைச்​சரின் உறவினர்​கள், அரசி​யல்​வா​தி​களின் நெருங்​கிய நட்பு வட்​டாரங்​கள், விண்​ணப்​ப​தா​ரர்​கள் என கூட்​டணி அமைத்து செயல்​பட்​டுள்​ளனர். தேர்வு முடிவு வெளி​யாகும் முன்பே சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்கு அதுகுறித்த விவரம் முறை​கே​டாக தெரிவிக்​கப்​பட்​டு, பணம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

2,538 பேரும் பணி​யில் சேர்ந்து 6 மாதங்​களுக்கு மேல் ஆகி​விட்​டது. நேர்​காணல் கடிதத்​துடன் 10 ரூபாய் நோட்டை அடை​யாள​மாகக் கொடுத்து கோடிக்​கணக்​கில் லஞ்​சப் பணம் ஹவாலா முறை​யில் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. அதற்​கான ஆதா​ரங்​களை வாட்​ஸ்​அப் உரை​யாடல்​கள், ஸ்கிரீன் ஷாட்​கள் மூலம் அமலாக்​கத்துறை நிரூபித்​துள்​ளது.

முறை​கேடு நடந்​துள்​ள​தாக தகவல்​களை அனுப்​பியது புல​னாய்வு அமைப்​பான அமலாக்​கத் துறை; மூன்​றாம் நபர்​கள் அல்ல. அவ்​வாறு ஆதா​ரங்​களு​டன் கடிதம் அனுப்பி மூன்​றரை மாதங்​களுக்கு மேல் ஆகின்​றன. ஆனாலும், தமிழக போலீ​ஸார் இன்​னும் நடவடிக்கை எடுக்​காமல், ஆரம்​பகட்ட விசா​ரணை என்று கூறி வழக்கு பதிவு செய்​யாமல் இழுத்​தடிப்​பது அதிருப்தி அளிக்​கிறது.

எனவே, அமலாக்​கத் துறை அனுப்​பிய ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் தமிழக லஞ்ச ஒழிப்​புத்துறை போலீ​ஸார் தாமதம் இன்​றி, சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது உடனடி​யாக வழக்கு பதிவு செய்ய வேண்​டும். விரி​வான வி​சா​ரணை நடத்​தி, அதன் அடிப்​படை​யில் சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இதுதொடர்​பாக ஆதி​நா​ராயணன் தொடர்ந்த வழக்கை தள்​ளு​படி செய்​கிறோம்​. இன்​பதுரை தொடர்ந்​த வழக்​கை முடித்​து வைக்​கிறோம்​. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தரவிட்​டுள்​ளனர்​.

அமைச்சர் நேரு மீது உடனே வழக்கு பதிவு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
‘முதல்வர் ஸ்டாலின் இமேஜை கெடுக்க சூழ்ச்சி!’ - கே.என்.நேரு விவகாரத்தில் திமுக ரியாக்‌ஷன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in