

மதுரை: பழநி கோயில் நில மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து தனியார் பெயருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி பழநி திமுக நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவகுமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், இந்த மோசடியில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. எனவே சிபிஐ விசாரித்தால்தான் முழு உண்மையையும் வெளிக்கொண்டுவர முடியும் என்றனர்.
அரசு தரப்பில், இந்த மனுக்களை விசாரிக்கும் முன்பு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு வழக்கு தொடர தகுதி உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பழநி நகராட்சி தலைவர் எந்த அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்தார்? பழநி மடத்தின் அறங்காவலர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் எப்படி இந்த வழக்கை தாக்கல் செய்தார்? இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன எனக் கூறப்பட்டது.
கோயில் நிர்வாகம் தரப்பில், கோயில் நிர்வாகத்தை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. அன்னபூரணி சிவக்குமார் மடத்தின் அறங்காவலர் அல்ல. அவர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவர். மனுவில் தவறாக குறிப்பிட்டுள்ளார் எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள், பழநி நில மோசடி வழக்கு விசாரணை தற்போது எந்த நிலையில் உள்ளது? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தால், அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடரலாம் என்றனர்.
பழநி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலின் வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், மனுதாரர் 2004 முதல் 2006 வரை பழநி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்துள்ளார். 2011-2016 ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அவருக்கு வழக்கு தொடர உரிமை உள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆகஸ்ட் 5-க்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.