திருப்பரங்குன்றம் மலை |கோப்புப் படம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலை மீது ஏற அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தேன்.
இதை விசாரித்த நீதிபதிகள், என் மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டார். இருப்பினும் என் மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ததில், சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுகிறது. எனவே மலைப்பகுதியை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும். சுமார் 5 ஏக்கர் பரப்பளவு பகுதியை அளவீடு செய்ய வேண்டும். அதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலையை முழுவதுமாக அளவிடும் பணி 4 வாரங்களுக்குள் முடிக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் லண்டன் பிரிவியு கவுன்சிலின் உத்தரவுக்கு பிறகு மலை மீது ஏதேனும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றிருந்தால், அது தொடர்பான விவரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14-க்கு தள்ளி வைத்தனர்.