

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், கைத்தறி, கைவினைப் பொருள் கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது.படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: அறநிலையத் துறை சார்பில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவுக்கான அரசு மானியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். அந்த வகையில், உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.18 கோடிக்கான காசோலையை சுசீந்திரம் -
கன்னியாகுமரி தேவஸ்தான கோயில்கள் இணை ஆணையர் ஜான்சிராணியிடமும், அரசு மானியம் ரூ.10 கோடிக்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட கோயில்களின் தக்கார் ரஞ்சிதாவிடமும், அரசு மானியம் ரூ.8 கோடிக்கான காசோலையை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லேவிடமும் வழங்கினார்.
முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 389 பக்தர்களுக்கு அரசு மானியம் தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.1.17 கோடி வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு காசோலைகளை வழங்கினார்.
கைவினைப் பொருள் கண்காட்சி: சென்னை கலைவாணர் அரங்கில், தமிழகத்தின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
கைவினைத் தொழிலுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகளை வழங்கினார். அதன்படி, 2025-26-ம் ஆண்டுக்கான ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகளை நாகை
சி.குளுந்தான் (பித்தளை கலைப் பொருட்கள்), தஞ்சாவூர் ந.ராஜேந்திரன் (இசைக்கருவி- வீணை), கோ.ரெத்தினம் (தஞ்சாவூர் கலைத்தட்டு), சென்னை சோ.கோபால் (இசைக்கருவி –சீர்யாழ்) மற்றும் சி.இந்திரா (தஞ்சாவூர் ஓவியம்), செங்கல்பட்டு கோ.சுப்ரமணியம் (கற்சிற்பம்) மற்றும் தி.திருமூர்த்தி (மரச்சிற்பம்), சிவகங்கை க.பால்ராஜ் (மரச்சிற்ப உட்பதிப்பு), கள்ளக்குறிச்சி எஸ்.எஸ். சங்கீதம் (மரச்சிற்பம்), கன்னியா குமரி கி.சுப்பிரமணியன் (கோயில் நகைகள்) ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தாமிரப் பட்டயம், தகுதிச் சான்றுகளை வழங்கினார்.
கைத்திறத் தொழிலின் பங்களிப்புக்கான ‘பூம்புகார்’ மாநில விருதுகள் தஞ்சை க.வெங்கடேஷ் (பஞ்சலோக சிற்பம்), சி.சங்கீதா (தஞ்சாவூர் ஓவியம்) மற்றும் அ.பாபு (தஞ்சாவூர் கலைத்தட்டு), விழுப்புரம் கு.ரீடா (உலோக தகட்டு வேலை) மற்றும் மு.ஷபானா (சுடுகளிமண் சிற்பம்), மயிலாடுதுறை சே.முருகன் (மரச்சிற்பம்), செங்கல்பட்டு அ.ராஜ் (கற்சிற்பம்), திருநெல்வேலி அ.கவ்வாபீவி (பாய் நெசவு) கன்னியாகுமரி தே.செலின் மேரி (சித்திரத்தையல்) மற்றும் சின்ன காஞ்சிபுரம் மு.குமார் (காகிதக்கூழ் பொம்மைகள்) ஆகிய 10 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பட்டயம், சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.