

சென்னை: அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ-க்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக்கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
கரூரில், செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதனையடுத்து அரசியல் கட்சிகள் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளில் தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது தங்களது பரிந்துரைகளை வழங்குமாறு அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது பரிந்துரைகளை நேற்றே வழங்கிவிட்டதாக கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்களது பரிந்துரைகளை தாக்கல் செய்தனர். அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசியல் கட்சிகள் அளித்துள்ள பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் எனக் கூறினார்.
இதனையடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.