

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயண், ‘‘மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும், தனி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். கூட்டங்களுக்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்கும்போது அதற்கு உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட ஆட்சேபங்களை தெரிவித்தார்.
தவெக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ‘‘அனுமதிக்கப்பட்ட இடங்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த இடங்களில் எத்தனை பேர் நிற்கலாம்? எத்தனை பேர் அமரலாம் என்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ‘‘அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்குப் பிறகு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது’’ என விளக்கம் அளித்தார்.
தேர்வு எழுதுவதுபோல்… இதையடுத்து, ‘‘தமிழக அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பார்க்கும்போது, ரோடு ஷோக்களுக்கு அனுமதி பெறுவது என்பது தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல் உள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? ஏற்கப்பட்டதா? என முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவையும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது’’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.