

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 35-வதாக இடம் பெற்றுள்ள மதுராந்தகம் தொகுதி, பல்வேறு முக்கிய அடையாளங்களை கொண்டுள்ளது. ஏரி காத்த கோதண்டராமர் கோயில், ஆட்சீஸ்வரர் கோயில், மாவட்ட பெரிய ஏரி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் என முக்கிய அடையாளங்கள் உள்ளன.
இத்தொகுதியில், கடந்த 1977 முதல் 2011 வரை நடைபெற்ற 9 சட்டப்பேரவை் தேர்தல்களில் திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும் மற்றும் காங்கிரஸ் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுகவின் மரகதம் 86,646 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பொதுமக்கள் கோரிக்கை
மதுராந்தகம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளதால், நகரின் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
மேலும், சாலை திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுடன் சாலையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மேலும், அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால்,மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், ரயில் போக்குவரத்து வசதியிருந்தும், மதுராந்தகம், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு, படாளம் ஆகிய ரயில் நிலையங்களில், தென் மாவட்ட விரைவு ரயில்கள் நிறுத்தி இயக்கப்படுவதில்லை.
எனவே, விரைவு ரயில்களை நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு வரையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களை, மேல்மருவத்தூர் வரையில் நீட்டிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இத்தொகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. ஆனால், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
அதனால், ஏரிகள் மற்றும் பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதியில், வனத் துறை,சுற்றுலாத் துறை இணைந்து சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
தொகுதியில் அதிகளவில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் வன்னியர் சமுதாயத்தினர் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு மொழி பேசும் மக்கள் மற்றும் பிற இனத்தவர்கள் கணிசமாக உள்ளனர்.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏற்கனவே தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள மரகதம் மீண்டும் போட்டியிடுகிறார். திமுகவில் அமுலு பொன்மலர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எழில் கேத்ரின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில், அதிமுக வேட்பாளர் ஏற்ெகனவே தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பது பெரிய பலமாக கருதப்படுகிறது. அதேபோல், திமுக சார்பில் புதுமுகமாக களமிறங்கியுள்ள அமுலுபொன்மலர் தொகுதியை சேர்ந்தவர் என்பதோடு, அனைவருக்கும் பரிட்சையமானவர் என்பதும் பலம் சேர்க்கிறது. அதனால், இம்முறை வெற்றி என்பது மிகவும் இழுபறியாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,01,308
பெண் - 1,03,975
மூன்றாம் பாலினத்தவர் - 61
மொத்த வாக்காளர்கள் - 2,05,344