சென்னை: தமிழக அரசால் மீண்டும் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்துள்ளார்.
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என குறி்ப்பிடப்பட்டிருந்தது. இந்த பல்கலைக்கழகம் அமைப்பதற்காக தமிழக அரசு 20 ஏக்கர் நிலத்தையும் மாதவரம் அருகில் ஒதுக்கியது.
ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் தரப்பில் இருந்து மசோதா தொடர்பாக விளக்கம் கோரப்பட்டது. அதற்கு, அரசு சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
அதன்பின்னரும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர், கடந்த ஆண்டு மசோதாவை திருப்பியனுப்பினார். இதையடுத்து, கடந்த அக்.16-ம் தேதி சட்டப்பேரவையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீ்ண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
அத்துடன், மசோதா தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்துகளை ஏற்க மறுத்து பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில், இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.